அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!

உலக சமுதாய சேவா சங்கம்





26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website :http://vethathiri.org/

நான் யார்?










நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி









வாழ்க்கைத் தத்துவம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையி லிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்கு தலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்றஇயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்றஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கை யெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித சக்தி மகத்தான சக்தி

உடல் லகுவாக இருக்க வேண்டும் Ease ful Body. மனம் அமைதியாக இருக்க வேண்டும் Peaceful Mind. வாழ்க்கை உபயோகமாக இருக்க வேண்டும் மள்ங்ச்ன்ப் கண்ச்ங். அதற்கு நாம் வாழும் காலத் திலேயே வாழ்ந்து கொண்டு

இருக்கும் தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள உடற்பயிற்சிகள், தவங்கள், காயகல்ப பயிற்சி, தற்சோதனை முறைகள் உறுதுணையாக உள்ளன.

அவர் பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் அருட்பெருஞ்சோதி நகரை உருவாக்கி அங்கு ஓம்கார மண்டபம் அமைத்து, தங்கி இன்றும் உலக அமைதிக்காக மவுனம் உட்பட பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு

இவ்வுலக இன்னல்களிலிருந்து விடுபட இரண்டொழுக்கப் பண்பாடு கூறுகிறார்.

1. “நான் எனது வாழ்நாளில் பிறரது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்”2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.ஆகா! என்ன அற்புதமான வரிகள். அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் துன்பமே இவ்வுலகில் இருக்காது.இன்புறுவோம்! இயல்பாய் வாழ்வோம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் பரிசாக இரண்டொழுக்காப் பண்பாட்டை, மேற்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி தன்னம்பிக்கை மாத இதழ்

இறைநீதி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன்



நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்".


-அருட்தந்தை
Showing posts with label மகரிஷியின் சிந்தனைகள். Show all posts
Showing posts with label மகரிஷியின் சிந்தனைகள். Show all posts

வேதாத்திரியன் கிராவிட்டி

Monday, September 15, 2008

VETHATHIRI - வேதாத்திரியன் கிராவிட்டி

தியானம்

Tuesday, August 19, 2008


தியானம் ஆன்மீக வழிபாட்டின் உயர் மட்ட நிலையாகும். உலகியல் சிந்தனைகளில் ஈடுபட்டு காரணமின்றி மனம் அலையாய் அலைகிறது. உள்மனத்தில் ஒரு போராட்டமே நிகழ்கிறது. அந்த மனத்தின் அலைச்சுழலை ஒருநிலைப்படுத்தி இறை நிலையோடு அதை ஆழ்த்துவதே தியானம். மனவலிமை, மன அமைதி, மனநிறைவு, மனதில் ஒரு தெய்வீகத்தன்மை இழையோடும் ஆனந்தம், வெற்றிகளையும், தோல்விகளையும் சம்மாக பாவிக்கும் தன்மை, அனைத்தும் தியானத்தால் அடையும் நன்மைகள்! மன ஒருமைப்பாடு இல்லாதவன் எதிலும் வெற்றி கானவே இயலாது. நம்முள்ளேயே அறிவாக இருக்கும் இறைவனை அறிந்து கொள்ள தியானம் அடிப்படையாகும்.

"உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்க"

என்பது ஔவையார் வாக்கு. இவ்வுடலைக் கொண்டுதான் ஆன்மாவை அறியலாம்! ஐம்புலன் அடக்கம், நம்முள் உள்ள தேவையில்லாததை நீக்குதல், தேவையேயில்லாத உடம்பின் சுகங்களுக்கு எல்லை கட்டுதல் தியானப் பயிற்சியில் நாம் பெறமுடியும்.
தியானம், (தவம்) செய்ய தயங்காதீர்கள்! எளிய முறையில் நிறைவான தியானம் செய்வதற்கு பழக்கும் நிலையம் தான் மனவளக்கலை மன்றங்கள்! அறிவுத்திருக்கோயில்ல்கள்! மகான் வேதாத்திரி மகரிஷியின் தத்துவ பயிற்சிகளே மனிதனை மாமனிதனாக மாற்றும் அன்பர்களே! மன்றத்திற்கு வாருங்கள்.

வாழ்க வளமுடன்.

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்

Sunday, August 17, 2008




'படிக்கும் போது தவம் செய்யலாமா?
இரவில் செய்யலாமா என்றெல்லாம்
கேட்பார்கள் . தவத்திற்கு காலமும் வேண்டியதில்லை திசையும்
வேண்டியதில்லை . அறிவை
விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம்.
அதற்கு காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தகாலத்திலும்
செய்யலாம் இதையெல்லாம் உணர்ந்து
நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம்
செய்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும், சிக்கல்கள் வராமல் காத்துக்கொள்ளவும் வேண்டிய விழிப்பு
நிலையை இந்த தவம் உங்களுக்குக்
கொடுக்கும்'


- அருட்தந்தை

எண்ணப் பதிவு --- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Monday, August 11, 2008


ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணம் எங்கும் செல்லும்



எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தியானத்தின் நன்மைகள் (Benefits of Meditation) -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :

1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.

4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மகான், ஞானி என்பவர்கள்யார் ?

Friday, August 1, 2008

அவர்கள் தைரியம் கொண்டவர்கள் அவர்கள் உண்மையை நோக்கிய பயணத்தை செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் மனிதகுல மேன்மைக்குண்டான சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி நடத்துவது என்று இயல்பாகச் சொல்லும் வார்த்தைகளே நமக்கு தத்துவமாகத் தெரிகிறது.அதன்படி நம்நாட்டு வேதாந்தங்கள் , சைவ சித்தாந்தங்கள் சத்தர்களின் சந்தனைவழி நின்று அவர்கள் கூறிய சாரத்தோடு விஞ்ஞானத்தை நிறைவாகச் சேர்த்து அதி உன்னத உண்மைகளை இந்த உலகிற்கு எவ்வித அச்சமுமின்றி, தயக்கமுமின்றி கூறியவர்தான் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த மகான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.மெய் ஞானத்தின் உண்மைகளை மெருகேற்றி,உருவாக்கி எளிமையாக்கி விஞ்ஞான சரக்காக்கி வித்தையாக்கி வீதிவலம் கொண்டுவந்து படிப்பறியா பாமரனும் அறியும்படி இயற்கை என்ற விந்தை நிறைந்த சக்தியையும் அதற்கு மூலமான எல்லா வல்ல பரம்பொருளையும் , இறை ஞானமாகத்தெளிவாக இனிமையாக போதித்தவர்தான் நமது குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் !
சிந்தையும் செயலும் இணைந்ததுதான் மனிதம்.சிந்தைக்கு வேண்டியது ஒருமைப்படுத்துகிற இறைநெறி! செயலுக்கு வேண்டியது அன்பில் விளைந்த அறநெறி! சிந்தை மூலத்தை(இறைநிலையை) நினைக்கட்டும் செயல் ஞானத்தை நனைக்கட்டும்! சிந்தையின் ஞானமே செயலின் சத்தியம்! ஞானமில்லையேல் சிக்கல் தொடங்கும் ஏமாறுவோம் அல்லது ஏமாற்றுவோம்! ஞான தீபத்தை மனவளக்களை பயிற்சியில் ஏற்றுங்கள். மன்றத்திற்கு வாருங்கள்! உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்! -வாழ்க வளமுடன்

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் கேள்வி பதில்

Tuesday, July 15, 2008

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.


கேள்வி : ஐயா.ஞானியர்கள் என்பவர்கள் யார்?

மகரிஷி : நான் போய்க் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் வந்து இது நன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டும் என்று என் மேல் துண்டை இழுக்கிறார். நான் சரி என்று விட்டு விடலாம். எனக்கு அதன் மீது கடும்பற்று என்றால் நான் அதை விட மாட்டேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். நான் பார்ப்பேன். வேறு வழியில்லை. உடனே என் வாயால் அவர் கையை கடித்து விடுவேன். இது சந்தர்ப்பத்தால் வெளிப்படும் செயல். ஆனாலும் கருத்தொடர் மூலம் விலங்கினத்தில் இருந்து வந்ததுதான். அவ்வளவும் உள்ளே அடக்கமாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களிடம் அடங்கியுள்ள பதிவுகள் செயலாக மாற அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அதனால் அப்பதிவுகள் அடங்கி இருக்கிறது என்று அர்த்தம். ஆக எல்லோரிடமும் இருக்கும் பிறர் வளம் பறித்துண்ணும் செயலும், பிறர் உயிரை வருத்தி வாழ்தலும் அடங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டு வந்தால்தான் மனிதனாக வர முடியும். அத்தகையவர்கள் தான் மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர்கள்.


கேள்வி:இன்றைக்கு தனிமனிதன், குடும்பம், நாடு, உலகத்தில் நிம்மதியில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் சந்தேகம்தான் காரணம். அந்த சந்தேகம் போனால்தான் உலகம் அமைதியாக வாழ முடியும் இல்லையெனில் அமைதியாக வாழ முடியாது. இந்தக் கருத்தை எல்லோர் உள்ளத்திலும் பதியவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்

மகரிஷி:மனிதனுடைய நிலைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது சில கருத்துக்கள் வரும். அப்படி ஏற்படக்கூடிய கருத்து எதுவானாலும் சரி நான்கு முகங்கள் உள்ளன.1.தேவையின நீதி (Justification of need)2.தேவையின் அளவு (Justification of Quality)3.தேவையின் தன்மை (Justification of quantity)4.தேவையின் காலம் (Justification of Time) எந்தக் கருத்தானாலும் அது தேவையை உணரக்கூடிய அடிப்படை ஒன்று. எவ்வளவு தேவை என்பது இரண்டு. எது மாதிரியாக அதனை அனுபவிக்க வேண்டுமென்பது மூன்று எப்பொழுது என்பது நான்கு. இந்த நான்கும் சேர்ந்ததுதான் ஒரு கருத்து.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கருத்து இன்னொருவருக்கு இருக்காது. இந்த நான்கு வகையிலும் கருத்து ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். அது மனிதனை மனிதன் உணராததனால், என் கருத்துக்கு இசைந்துதான் அவர் நடக்க வேண்டும், என் கருத்தைத் தான் அவர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு (Ego) தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. அந்த தன்முனைப்பு எதுவரைக்கும் உண்டு?

தன்னையறியும் வரைக்கும்.தேவைப்படக்கூடிய ஒன்றை அறியாத முன்னம், பொருள்,புகழ்,அதிகாரம்,புலனின்பம் இந்த நான்கிலே சிக்கிக் கொண்டு அங்கு தவிக்கிற பொழுது, அங்கு நான்தான் பெரியவன், எனக்கு வேண்டியதுதான் வேண்டும், நான் விரும்புவதுதான் சரி என்று இந்த நான்கில் இவன் எப்படி நினைக்கிறானோ அதேபோன்று மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதனால் (Conflict) ஒருவருக்கொருவர் ஒரு பிணக்கு ஏற்படுகிறது. இந்தப் பிணக்குத்தான் இன்று எல்லா சங்கடங்களுக்கும் காரணமே தவிர, சந்தேகம் என்று ஒன்று இல்லை. இருந்தாலும் ஏன் என்றால் இங்குதான் கருத்தொடர் பதிவைப் பற்றி நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.ஒரு மனித உருவம் எங்கிருந்து வந்திருக்க முடியும்? ஐயறிவு இனத்திலிருந்துதான் மனிதன் வடிவம் வந்திருக்க வேண்டும். இயல்பூக்கம் (Mutation) வழியாக வந்திருக்க வேண்டும். மனிதன் தோன்றி இதுநாள் வரையில் இந்தப் பதிவு எங்கிருந்து வந்தது. மனிதனுக்குத் தேவைதானா என்று எண்ணிய ஒரு மனிதன் விடுபட்டான். மற்றவர்கள் அங்கேயே அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் ஒருவர் வாழ்வை ஒருவர் பறித்துண்ண வேண்டும் என்ற பழக்கமும் அந்த சிந்தனைற்ற செயலும்தான் சந்தேகத்திற்குக் காரணமே தவிர அந்த சந்தேகம் போக வேண்டுமானால் மனிதனுடைய பிறப்பை உணர வேண்டும், பிரபஞ்ச இயக்க நியதிகளை உணர வேண்டும்.

இச்சை -- ஞானமும் வாழ்வும் -- அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்
இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும்
இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்
இச்சை ஒழித்திட ஏன் முயலுகின்றீர்கள்.


இச்சை என்பது தேவையுணர்வாகும்
இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும்
இச்சைச் செயலில் இணைந்திடும் மீறிடும்
இச்சைப் பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்.


இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி
இச்சித்தனுபவித்திச்சை இயல்பைப் பார்
இச்சையின் சக்தியை இச்சையில் சேமிக்க
இச்சை உயர்ந்திடும் இன்பம் பெருகிடும்


இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்டும்
இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும்
இச்சையின் முடிவில் இதே சிவம்
இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்


இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்ன?
இச்சை சுகதுக்கத்தபாலும் உள்ளதோ?
இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்
இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்


இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்
இச்சைக்குள்தானே இயங்குகிறது
இச்சை விரிந்திட ஐம்புலனே வழி
இச்சை அறிவென்ற பெயர் பெற்றதினாலே


இச்சை ஒலி, ஒளி போல் எழும் மாறிடும்
இச்சை வெளியோடு இணைந்து ஒன்றாகிவிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே


இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்

இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர்
இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும்
இச்சை எழும் போதே ஆய்வோர் அறிவார்கள்
இச்சை இச்சையாலும் திறன் காண்பார்

இச்சை வேகமே மீறிட மீறிட
இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப்பார்
இச்சை வேகமும் இயங்கும் வேகமும்
இச்சித்தறிந்திட இரண்டும் நீ அவ்விடம்

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்
இச்சையே காம முதலான அருகுணம்
இச்சையின்றேன் உயர் ஞான்ந்தான் ஏது?
இச்சையே நி நான் இவர் அவர் என்பதும்


இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை
இச்சை ரசிப்பது எண்ணுதல் அறிவாகும்
இச்சை பொருள் வரை இயங்க ஐயுணர்வாகும்
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்



இச்சையை புள்ளியாய் நிறுத்தப் பழகிடு
இச்சை விரிந்தால் ஆராய்ச்சியாக்கிடு
இச்சை விரிந்து பேராதார நிலையெய்த
இச்சைப் புலன்களை வென்று நிலை பெறும்

இச்சை முதல் படி * காமதேனு வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் என்பார்கள்
இச்சை உயர்நிலை சிந்தாமணி யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்


இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்
இச்சைச் சினமாக கவலையாய் நிலைமாறும்
இச்சையின் தோற்றமும் கவலையாய் நிலைமாறும்
இச்சை தோற்றமும் முடிவுமறிந்திடில்
இச்சையே எல்லை யற்ற பராபரம்.


* காம + தேனு = ஆசைப் பசு
கற்பு + அகம் = கற்பகம்
சிந்தா + மணி = சிந்தை உறுதி

--அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆன்மீகக் கல்வி

ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி'யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை. ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய "பிரம்மஞானம்" பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்.

பிறப்பின் நோக்கம்


ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).

சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும், உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன்.

மனிதனில் தான் அறிவினுடைய முழுமையைப் பெற முடியும். பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்). இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறி விடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்ட பிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சித்து

ஜால வித்தை போன்ற சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும், உருக்கத்தோடு சொல்லுகிறேன். "சமூகத்திற்கு எந்தவித நன்மையும் விளைவிக்காத நஷ்டமும், கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை 'சித்து' எனக் கொள்ளும் மயக்கத்தை விட்டு விடுங்கள்" நன்றாக ஆராயுங்கள்.

ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கிப் பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புதச் சிற்பமான குழ்ந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால், எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு 'பெருஞ்சித்து' அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாகப் பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள். இது எத்தகைய சித்து?

ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 இலட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்த விதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்சையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.

இறை ஞானம்

Wednesday, December 19, 2007

VETHATHIRI - இறை ஞானம்

முழுமையான அறிவியல்

VETHATHIRI - முழுமையான அறிவியல்

பேச்சுக்கலை

PROFMADH - பேச்சுக்கலை

மாக்கோலங்கள்

VETHATHIRI MAKKOLAM - மாக்கோலங்கள்

அறிவு

Arivu

வேதாத்திரி மகரிஷி பதில்கள்

வாழ்க வளமுடன்..!



மகரிஷியிடம் அன்பர்கள் பல வினாக்களை கேட்டு ஐயம் தீர்த்து கொள்வர். குருவின் பதில்கள் மிகவும் சுவாரசியமாகவும் சிந்தனை மிக்கதாகவும் இருக்கும். நம்மில் பலருக்கும் இங்கே உள்ள விடைகள் நம் மனதில் தற்போதுள்ள ஐயத்திற்கு விடை அளிக்கலாம்.. அப்படிப்பட்ட சில வினா விடைகளை இங்கே காண்போம். பயன் பெறுவோம். குருவின் பதில்கள் எளிதாக புரியும்படி இருக்கும். ஏதேனும் புரியாமல் இருந்தால் அன்பர்கள் விவாதித்து தெளிவு பெறலாம்..



வினா:



சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?



மகரிஷியின் விடை:



செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது. ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம். மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம். ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.



வினா:



இன்றைய வாழ்க்கையில் கொலை செய்வோர், கற்பழிப்போர், களவு செய்வோர் ஆகியோர் பால் சினம் கொள்ளாமல் வாழ இயலுமா?



மகரிஷியின் விடை:



கற்பழித்தல், திருடுதல் முதலிய குற்றங்கள் செய்பவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு அவர் மீது சினம் எழாமல் இருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் உள்நோக்கி பாருங்கள். நமது ஆயுளிலே தெரிந்த வரையில் எத்தனை குற்றங்களை செய்திருப்போம். அவ்வாறு பல குற்றங்கள் செய்த நிலையிலே, அதாவது பிடிபடாத குற்றவாளிகளாக ஒவ்வொருவரும் இருக்கும் போதே வேறு ஒருவர் குற்றம் செய்யும்போது ஒத்துப்பர்த்து, அவர்தான் குற்றவாளி என்று எண்ணுவது ஒரு சாதாரண மனித மனதின் இயல்பு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமானால் இந்த உண்மைகளைஎல்லாம் உணர்ந்து யார் மீதும் சினம் எழாமல் காக்கும் அளவுக்கு மன விரிவும் அறிவின் உயர்வும் ஏற்படும்.





சுவாமிஜி சுவாமிஜி


வினா:



காயகல்ப பயிற்சி தினந்தோறும் செய்யவேண்டும் என்கிறீர்களே, ஐயா..! உடல் நிலை சரியில்லாதபோது செய்யலாமா..?



மகரிஷியின் விடை:



தினந்தோறும் காயகல்பம் செய்யவேண்டும் என்று நான் சொன்னபோது சரியாக உள்ள நாட்களைத்தான் (Normal Days) நான் குறிப்பிட்டேன். உடல்நிலை பாதிக்கபட்ட நாட்களில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டியதில்லை. அசுவினி முத்திரை மட்டும் போடலாம். விரைவில் குணமடைய அது உதவும். பழகிவிட்ட பிறகு நினைக்கும் போது 10 தடவை அசுவினி முத்திரை செய்யலாம். உடலுக்கும் நல்லது.; மனதுக்கும் நன்மை பயக்கும்.



வினா:



குழந்தைகள் எந்த பாவமும் செய்யாத முன்னம் ஏன் பல துன்பங்களுக்கு உட்படுகின்றன?



மகரிஷியின் விடை:



குழந்தை என்பது பெற்றோர் கர்மங்களின் தொடர் நிகழ்ச்சி என்பதை முதலில் நினைவு கொள்ள வேண்டும். வித்தில் ஏற்பட்ட பதிவு விளைவாக மலரும் இடம் குழந்தைகள் தான். பெற்றோர் குழந்தைகள் இவர்களுடைய உடல்கள் தாம் வேறுபட்டனவே தவிர உயிர் வேறுபடவில்லை. கர்மம் வேறுபடவில்லை. எனவே குழந்தைகள் வருந்துவதற்கு பெற்றோர் மாத்திரம் அல்ல, பல தலைமுறை தாண்டிய பாட்டன் பாட்டிகளும் பொறுப்பாவார்கள்.



வினா:



கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் உண்ணா நோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறீர்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?



மகரிஷியின் விடை:



சூரியன் வேகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும். அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் “கரு அணு” என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு. அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை “Black-spot in the Sun” என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி. சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.



ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே “கிரகணம்” என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் “சூரிய கிரகணம்”; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது “சூரிய கிரகணம்”. சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் “சந்திர கிரகணம்”. அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம்.



Black-hole இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.



கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.



வினா:
குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன், குடலிறக்க நோய் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் காயகல்ப பயிற்சியை எப்பொழுது மீண்டும் தொடங்கலாம்?



மகரிஷியின் விடை:



ஆபரேஷன் நடந்து 6 மாத காலம் ஆனபிறகுதான் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது கூட ஓஜஸ் மூச்சு போடும்போது சிரமமோ வலியோ தென்பட்டால் மேலும் 3 மாதம் தள்ளி போடலாம். சிறிது சிறிதாக ஓஜஸ் மூச்சு இழுத்து பார்த்து வலியில்லாத அளவுக்கு ஆக்கிக் கொள்ளவேண்டும். இந்த முற்பயிற்சி குடல்நிலை தேறுவதற்கும் பயனுள்ளதாக அமையும்.



source.vethathiri.org


<>

உடல் நலம்

உடல் நலம்
அருட்தந்தை


1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது. ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.


thanks.vethathiri.org