Tuesday, September 16, 2008

அமைதியான வாழ்வுக்கு மனவளக்கலை

நாம் வாழும் உலகில் விஞ்ஞானம் மென்மேலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவுக்கு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை (வசதி) பொருட்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் குழப்பமும், சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் குடும்ப வாழ்வில் அச்சமும், குழப்பமும் சூழ்ந்திருக்கிறது.

இந்த குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை நெறியும்தான் தனிமனிதனையும் மனிதகுலத்தையும் குடும்பத்தையும் காக்கவல்லது. உயிரின் மதிப்புணர்ந்து மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத் தன்செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க தெளிவும் பயிற்சியும் பழக்கமும் மனவளக்கலை என்றபோதனை கலந்த சாதனைகளால் தான் கிட்டும்.

செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இது முதலில் தெரியும் போது இனிமேல் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வருகின்றது தவறிழைப்பது மனம். இனி தவறு செய்துவிடக்கூடாது என தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.

மனத்தின் உயர்வு எதுவோ அதுவே மனிதனின் உயர்வு. ஆகவே மனத்தை எந்த அளவில் உயர்த்திக் கொள்கிறமோ, தெளிவுபடுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிலே தான் மனிதனுடைய வாழ்வும் குடும்பத்தின் நலனும் உயரும்.

மனவளக்கலையின் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி விவரம்-
1, உடலை பாதுகாக்க - எளியமுறை உடற்பயிற்சி
2, மனதை வளப்படுத்த- எளியமுறைதியானப்பயிற்சி
3, உயிரை நீண்ட ஆயுளாக்க- காயகல்பப்பயிற்சி
4, குணத்தை மேம்படுத்த- தற்சோதனைப்பயிற்சி

இப்பயிற்சிகள் மூலம் தனி மனிதன் நிறைவு, அமைதி பெற்று அவர்களைச்சார்ந்த குடும்பமும் அமைதி, மகிழ்வு, வெற்றி, நிறைவு பெறுகின்றன. குடும்பத்திற்கு ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும் அதனை தடுத்துக்கொண்டிருக்கும் துன்பங்கள், சிக்கல் இவற்றை குறைப்பதற்கும் ஒரு செயல் பயிற்சியாகும்.

1 comment:

  1. நல்ல அறிமுகம் ...வாழ்க வளமுடன் ...முத்துபாரதி .திருப்பூா்

    ReplyDelete