அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!

உலக சமுதாய சேவா சங்கம்





26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website :http://vethathiri.org/

நான் யார்?










நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி









வாழ்க்கைத் தத்துவம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையி லிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்கு தலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்றஇயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்றஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கை யெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித சக்தி மகத்தான சக்தி

உடல் லகுவாக இருக்க வேண்டும் Ease ful Body. மனம் அமைதியாக இருக்க வேண்டும் Peaceful Mind. வாழ்க்கை உபயோகமாக இருக்க வேண்டும் மள்ங்ச்ன்ப் கண்ச்ங். அதற்கு நாம் வாழும் காலத் திலேயே வாழ்ந்து கொண்டு

இருக்கும் தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள உடற்பயிற்சிகள், தவங்கள், காயகல்ப பயிற்சி, தற்சோதனை முறைகள் உறுதுணையாக உள்ளன.

அவர் பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் அருட்பெருஞ்சோதி நகரை உருவாக்கி அங்கு ஓம்கார மண்டபம் அமைத்து, தங்கி இன்றும் உலக அமைதிக்காக மவுனம் உட்பட பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு

இவ்வுலக இன்னல்களிலிருந்து விடுபட இரண்டொழுக்கப் பண்பாடு கூறுகிறார்.

1. “நான் எனது வாழ்நாளில் பிறரது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்”2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.ஆகா! என்ன அற்புதமான வரிகள். அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் துன்பமே இவ்வுலகில் இருக்காது.இன்புறுவோம்! இயல்பாய் வாழ்வோம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் பரிசாக இரண்டொழுக்காப் பண்பாட்டை, மேற்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி தன்னம்பிக்கை மாத இதழ்

இறைநீதி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன்



நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்".


-அருட்தந்தை

எனது வாழ்க்கை வரலாறு - வேதாத்திரி (1)

Sunday, August 10, 2008

எனது வாழ்க்கை விளக்கம்


எனது அறிவோடு அறிவாய் உயிரோடு உயிராய்க் கலந்து கொண்டு அன்பு காட்டும் என் நண்பர்கள், மாணவர்கள் பலர் விருப்பப்படி எனது வரலாற்றை யானே எழுதுகிறேன். எனது வரலாற்றை முழுமையாக அறிந்துி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையோர்கள் உள்ளம் நிறைவு பெற வேண்டுமென்று கருதி என் கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.
எந்தப் பேராற்றலுடைய சக்தியின் அகத்திலே பல கோடி அண்டங்கள் மிதந்து உருண்டு ஓடி இயங்கிப் பேரியக்க மண்டலமாக அமைந்திருக்கிறதோ, அந்த எல்லாம் வல்ல பெரு நிலையை நினைவுகொண்டு எனது வரலாற்றை யானே எழுத முற்படுகிறேன்.
எல்லா உயிர்களுக்கும் அமைத்தது போன்றே, எனக்கும் யான் பிறக்கும் போதே என் வாழ்நாட்கள் முழுமைக்கும் தேவையானவற்றை எல்லாம் அமைத்து எனது பிறப்போடு இணைத்து வைத்திருக்கும் தெய்வீக ஒழுங்கமைப்பை, அதன் பெருமையை நினைந்து, நினைந்து, கனிந்து, கனிந்து, மகிழ்ந்து, மகிழ்ந்து, என் வரலாற்றை நண்பர்களுக்குக் கூற விழைகிறேன்.
எந்த மனித சமுதாயம் என்னை உருவாக்கி, இந்த உலகில் பலவிடத்திலும் தோன்றும் பொருட்களை எனது வாழ்வின் வளத்திற்காகத் தந்து என்னை வாழ வைக்கின்றதோ, அந்த அன்புச் சமுதாயத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்தும், அதனை உளம் நிறைவோடு வாழ்த்தியும், என் வாழ்கைக் குறுப்புகளை வரையத் தொடங்குகிறேன்.
தங்கள் உயிரிலும் உடலிலும் பங்கு பிரித்து, ஒன்று கூட்டி, என் உடலாக மலர்த்தி, வளர்த்து, இவ்வுலகுக்கு எனை அளித்த என் அருமை அன்னையையும் தந்தையையும் வணங்கி, அவர்கள் எனக்காக ஏற்ற துன்பங்களை நினைந்து நினைந்து, கசிந்து உருகி, என் வாழ்க்கை வரலாற்றினை எழுதத் தொடங்குகிறேன்.
எழுத்தறிவும், தொழிலறிவும், இயற்கைத் தத்துவ அறிவும், ஒழுக்கப் பழக்கங்களும், உள்ளுிணர்வும், தவமும் அறிவித்த எனது, ஆசிரியர்கள் எல்லோருடைய தாள்களையும், உள்ளத் தமர்த்திப் பணிவோடு வணங்கி, எனது வாழ்வின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நண்பர்கள் அறிய எழுதத் தொடங்குகிறேன்.
என் வாழ்க்கைத் துணைவிகளாகி, எனது இன்ப துன்பங்களில் கூட்டு சேர்ந்து, எனக்கு ஏற்ற தொண்டாற்றி உதவி புிரிந்து வரும் என் மனைவியர் இருவரையும், உளம் நிறைவோடு வாழ்த்தி, எனது கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.




எனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாது. ஆகையால் என் மூத்த அக்காள் வாயிலாகக் கேட்டறிந்தபடி எழுதுகிறேன்.
இந்த வரலாற்றில் வரும் சில நிகழ்ச்சிகளை என் அன்னையே எனக்குச் சொல்லியும் உள்ளார்கள்.
இந்திய நாட்டில் சென்னை மாநிலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி என்னும் பெயருடைய சிற்றூர்தான், நான் பிறந்த ஊர். என் அருமை அன்னையின் பெயர் சின்னம்மாள். என் மதிப்பு மிக்க தந்தையின் பெயர் வரதப்ப முதலியார். செங்குந்தர் குலம். என் தந்தை கை நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். என் பெற்றோருக்கு நான் எட்டாவது குழந்தை. எனக்கு முன்னர்ப் பிறந்த ஆண் மகன், ஏழாவது வயதில் இயற்கை எய்தி விட்டான். எனக்கு முன் பிறந்த பெண்கள் ஆறுபேர். அவர்களில் இப்போது மூவர்தான் உள்ளனர். அவர்கள் பெயர்கள் முறையே கற்பகம், சின்னம்மாள், நாகம்மாள். எனக்கு இளையவன் ஒருவன். அவன் பெயர் தெய்வசிகாமணி. இப்போது சைதாப்பேட்டையில் வாழ்ந்து வருகிறான். இந்தக் குறிப்புகளை விளக்கும் கவிகள் கீழே உள்ளன. படியுங்கள்.
“கோயில்குளம் சென்று பலநோன்பு நோற்றுக்குலத்திற்கோர் மகன் வேண்டித் தவம்புரிந்ததாயின் பெயர் சின்னம்மாள்; பரம ஏழை;தந்தை பெயர் வரதப்பன்; இவர்களுக்குஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினொன் றாண்டில்,ஆகஸ்டு பதினான்கு திங்கள் காலை,போயின நூற்றிருபத்தியொரு விநாடிபிறந்தேன் யான்; கூடுவாஞ்சேரி ஊரில்”
“மீன இராசிச், சிம்ம இலக்கனத்தில்,மேடத்தில், இராகு சனி செவ்வாய் நிற்க,பானு கடகம் புதனோ இலக்கினத்தில்பலமிழந்து கன்னியிலே சுக்கிரன் நிற்க,வானகுரு கேது துலா இராசி நிற்க,வந்த உத்திரட்டாதி மீன் சனி திசையில்,போன மிச்சம் மூன்றாண்டு, ஐந்து திங்கள்,பொழுதைந்து; இதுவே என் பிறந்த காலம்.”
“எனக்கு முன்னம் பிறந்தோர்கள் பெண்கள் ஆறுஏறுஒன்று இருபெண் ஓர் ஆண் இறந்தார்மனக்கவலை வறுமை இவைக் கிடையே வாழ்ந்து,மகனாக எனைப் பெற்றோர், மறந்தார் துன்பம்;தனக்கில்லா விடினும், தன் மக்கட் கிட்டுத்தாய்க்கடமை செய்வோரில் தலை என் அன்னை;இனத் தொழிலாம் கை நெசவில் ஈடுபட்டுஇரவுபகலாய் உழைத்தார் எனது தந்தை.”
ஆறு பொண்களைப் பெற்ற பெற்றோர்கட்கு, ஏழாவது ஆண் மகவு பிறந்து, அதுவும் ஏழு வயதில் இறந்துவிட்டால், அவர்கள் மனம் எவ்வாறிருக்கும்? எப்போதும் தெய்வத்தை நினைந்து நினைந்து உருகினார்கள். பல நோன்புகளை நோற்றார்கள். தரையை மெழுகி, சாப்பாடு அதன் மேல் போட்டுக்குனிந்து வாயினால் சாப்பிடும் ஒரு நோன்பைக்கூட சிலநாள் என் அன்னை கடைப்பிடித்ததாகச் சொன்னார்கள். என் பெற்றோர் பக்தியில் ஆழ்ந்தவர்கள். அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பதாக வேண்டிக்கொண்டால், ஆண் மகவு பிறக்கும் என்று யாரோ சொன்னார்களாம். கூடுவாஞ்சேரியில் அப்போது அரசு வேம்பு இணைந்த மேடை கிடையாது. என் தந்தையார் ஒரு அரச மரச் செடியையும், வேம்பு மரச் செடியையும் தேடிக் கொண்டுவந்து, கூடுவாஞ்சேரிக் குளக்கரையில் மேற்கு பக்கத்தில் வைத்து வளர்த்தார். அதை வளர்க்க அவர் பட்ட தொல்லைகளை ஒரு நாள் விளக்கிக் கூறினார். என் கண்களில் நீர் கலகலவென்று சொரிந்தது. அந்த இரண்டு செடிளும் மரமாகும் வரைக்கும், ஒரு ஏழை நெசவாளி தனது பிழைப்பிற்குத் தொழில் செய்து கொண்டே, அவற்றை காவல் காத்துத் தண்ணீர் ஊற்றி வரவேண்டுமெனில் எவ்வளவு உழைப்பு உழைத்திருக்க வேண்டும்? அந்த மரங்கள் வளர்ந்தன. இப்போது கூட, நான் பார்க்க நேர்ந்தால், அவை ஏதோ என்னோடு பேசுவதாகவே தோன்றுகிறது. ஆலய வழிபாட்டிலும், மதச் சடங்குகளிலும் உள்ள தேவையற்ற செயல்களை விளக்கி அவற்றை ஒழித்துத் தெளிவோடு வாழவேண்டும் என்று சீர்திருத்தம் பேசும் என்னை நோக்கி, அந்த மரங்கள் உங்கள் பெற்றோர் எங்கள் வாழ்வோடு, உனது பிறப்பை இணைத்து வைத்தனர் என்று கூறுவது போல், ஒரு நினைவு எழுகின்றது. அவர்கள் உள்ளத்தின் நிலை அது. சிம்ம லக்கினத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று, அறிந்த எனது தந்தைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஊர் முழுவதும் சர்க்கரை வழங்கி அவர் உள்ளப் பூரிப்பை வெளிகாட்டினார். குழந்தைப் பருவத்தில் மிகவும் அழகாக இருந்தேனாம். நான்கு வயதிற்குமேல் நடந்த சம்பவங்கள்தான் எனக்குச் சுமாராக நினைவுக்கு வருகின்றன. என்னைக் கீழே நடக்க விடமாட்டார்கள். என் அன்னையாரும், தந்தையாரும் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நான் எந்த உவமைகொண்டு கூறுவேன். மூன்று வயதில் ஒருநாள் என்னைத் தனது வயிற்றின் மீது கிடத்திக்கொண்டு, மல்லாந்து படுத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் என் அன்னை. அப்போது நான் முன்னோக்கி விரைவாக அவர்கள் வாயில் தலையால் மோதிவிட்டேனாம். முன் பல்லில் ஒன்று பெயர்ந்து விட்டதால், இரத்தம் கொட்டிக் கொண்டிருந்ததைக் கூடப் பாராமல், தனது வாயைப் பொத்திக்கொண்டு குழந்தை தலையில் அடிபட்டிருக்குமே, எவ்வளவு வலி குழந்தைக்கு இருக்குமோ என்று கதறி அழுதார்களாம். என்னைக் கீழே கிடத்திவிட்டுத் தூங்கினால், எறும்பு கடிக்குமோ என்று வயிற்றின் மீது போட்டுக்கொண்டு தூங்கினார்கள் என்றால், ஒரு மகனுக்காக ஒரு தாய் ஆற்றும் தொண்டு எத்தகையது? தாய் அன்புக்கு இணையாகச் சொல்லக்கூடிய ஒன்று வேறு ஏதும் உண்டா?



எனக்கு ஐந்து வயது நிரம்பியது. என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதைப் பற்றி, நாள்தோறும் என் பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழ்மையின் அடிதளத்தில் அவர்கள் பொருளாதார நிலை எனினும், ஒரு ஆண் குழந்தை அவர்களுக்கு இருக்கிறது என்ற நினைவில், மகிழ்ச்சியின் உச்சத்தில், என் பெற்றோர் வாழ்ந்து வந்தனர். என்னிடம் அவர்கள் கொண்டிருந்த பாசத்தை நான் எவ்வாறு விளக்குவேன். அந்த வயதில் அது பாசமென்றுகூட எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்ப்பார்கள். புன்னகை பூக்கும் அவர்கள் முகத்தில், நானும் சிரிப்பேன். உடனே என்னை வாரி அணைத்துக் கொள்வார்கள்; இந்த நிகழ்ச்சிகள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன.
ஐந்து வயது வரையில் எனக்குச் சோற்றை ஊட்டியே வளர்த்தார்கள். என் அன்னைதான் என்னைத் தூக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டுவார்கள். கோழி, காக்கை, பல்லி இவற்றை நேரில் காட்டுவார்கள். குரங்கு, யானை, புலி, கரடி இவற்றையெல்லாம் கதைகள் மூலம் வரவழைத்துக் காட்டுவார்கள். அடிக்கடி அவர்கள் சொன்ன “கஜேந்திர மோஷம்” என்னும் கதை என்னைக் கூடுதலாகச் சோறு சாப்பிட வைக்கும். மற்ற கதைகளைவிட அந்தக் கதையில்தான், நான் அதிகமாக மயங்கி விடுவேன். ஒரு பெரிய குளம், அதிலே வாயைத் திறந்து கொண்டு நிற்கும் முதலை, தண்ணீர் குடிக்க வரும் பெரிய யானை, யானையின் காலை முதலை கவ்விக் கொள்வது, யானை “ஆதிமூலமே” என்று அலறுவது, ஆகாயத்திலே சங்கு சக்கர தாரியாக மகாவிஷ்ணு நின்று கொண்டு கையை ஆட்டுவது, இந்தக் கற்பனைக் காட்சிகள் எனது பிஞ்சு உள்ளத்தில் ஆழ்ந்து பதிவு கொண்டன. நான் பல கேள்விகள் எழுப்புவேன். எனக்கு யானை மீதுதான் அதிக இரக்கம்; பாசம். பாவம்! யானை ஏனம்மா முதலையிருக்கும் குளத்திற்கு வந்தது? அந்த முதலையை யாரும் அடித்துத் துரத்தவில்லையா? யானைக்கு வேறு குளம் தண்ணீர் குடிக்கக் கிடையாதா? அந்த யானைக்கு அம்மா அப்பா இல்லையா? இவ்வாறெல்லாம் வினாக்கள் எழும். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டே, ஒரு வாய் சோற்றை உள்ளே தள்ளுவார்கள். என் அன்னை ஒரு அளவு வைத்திருந்தார். அந்த அளவுப்படி நான் சாப்பிட்டு விட்டால், கதைகள் காட்சிகள் எல்லாம் முடிந்து விடும். ஆயினும் எனக்கு மட்டும் “கஜேந்திர மோஷம்” உள்ளத்தில் திரும்பத் திரும்பக் காட்சி அளித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கதையைப் பற்றி எனது ஏழு வயதில் ஒரு முடிவு கிடைத்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.




பள்ளிக்கூட நுழைவு


1916-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தை என் தந்தையார் எதிர்பார்த்திருந்தார். அவருக்கு ஒரு சோதிட நண்பர் எதிர் வீட்டில் இருந்தார். அவரிடம் சென்று நேரம் குறித்துக் கொண்டார். எனக்கு ஒரு தொப்பி, சட்டை, துணி இவையெல்லாம் புதியதாக வாங்கி வைத்திருந்தார்கள். அவர்கள் பொருளாதார நிலையில் இவற்றையெல்லாம் எவ்வாறு வாங்கினார்களோ? அதற்கு அவர்கள் எடுத்த முயற்சி அவர்களுக்குத்தான் தெரியும். எனக்கென்ன தெரியும்? ஏழ்மையோ, கடனோ முதலோ ஏதும் எனது உள்ளத்தில் அப்போது எவ்வாறு இடம்பிடிக்கும்? கடன் என்ற ஒரு மாய விலங்கில் தன்னை மனிதன் மாட்ட வைத்துக் கொள்ளாத பருவம் அதுதானே! ஏழ்மை என்ற தாழ்வு மனப்பான்மை கூட, அப்போது ஏது? அப்பா அம்மா காட்டும் பரிவே பெரும் செல்வமாகவன்றோ குழந்தை வயதில் இருக்கின்றது? மற்றெந்தச் செல்வமும் அந்த இன்ப ஊற்றுக்கு இணையேது?


பிள்ளையார் பூசை


குறித்த நேரத்தில் என்னைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். நாள்தோறும் அக்கோயிலை என் தந்தையாருடன் சுற்றி வருவது வழக்கம். என் தந்தையார் இரண்டு கைகளாலும் குட்டிக் கொண்டு, கைகளை மாற்றிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட காட்சி, இன்னும் எனது உள்ளத்தில் இனிமையான நினைவாக இருக்கின்றது. நானும் குட்டிக் கொண்டேன். எனினும், நான் முதல் முதல் பள்ளிக்கூடம் போவதற்காகத் தொப்பி, புதுத் துணி, சட்டை இவற்றோடு கோயிலுக்குப் போய், அந்தப் பிள்ளையாரைப் பார்த்தபோது அன்று ஒரு புதுமையாகவே இருந்தது. பிள்ளையார் என்னை மகிழ்ச்சியோடு பார்த்து, ஆசி கூறுவது போலவே, எனது கற்பனை இருந்தது. என் தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தேன். நான் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பிள்ளையாரை வணங்கிய போது தேங்காய், பழம், சரக்கரை எல்லாம் வைத்து என் தந்தை விநாயகரை வேண்டிக் கொண்டார். அந்தச் சிறு வயதிலேயே சில துதிப்பாடல்களை எனக்குச் சொல்லி வைத்திருந்தார். மழலை மொழியில் அடிக்கடி நான் பாடுவேன். அதைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்தார்கள் எனது சிறுவயதில். யானோ இப்போதுகூட அவர்களை நினைத்தால், என் கண்களில் நீர் ததும்புகின்றது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர்கள் கடைசி வரையில் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து விடுவிக்கும் வயதும், சூழ்நிலையும் கிட்டியபோது, அவர்கள் தெய்வங்களாகி விட்டார்கள். எனது 22 வயதில் தந்தை இயற்கை எய்தினார். அன்னை எனது 35-வது வயதில் தெய்வமாகி விட்டார். அன்னை மாத்திரம் கடைசி காலத்தில், ஒரு பத்தாண்டு காலம் ஒருவாறு பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட்டு, இருக்க முடிந்தது.


இந்த இடத்தில் என் தந்தை அன்னை இருவரைப் பற்றிச் சில குறிப்புகள் கொடுக்க விரும்புகின்றேன்.




இரண்டு பேரும் ஊருக்குப் பொதுத் தொண்டர்கள். எந்த வீட்டில் எவர் நோயுற்றிருந்தாலும், அங்கு என் தந்தை அடிக்கடி போய், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். நாடி பார்ப்பதில் நிபுணர். கையில் மருந்து கிடையாது. எனினும் மூலிகை மருத்துவம் அவருக்கு நன்றாகத் தெரியும். நாட்டுச் சரக்குகளைக் கொண்டே கஷாயம், கலிகம், சூரணம் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்து வருவார். அவர் எவரிடமும் மருந்துக்காகக் காசு வாங்கியதே இல்லை. எனது அன்னை தந்தை இருவருக்குமே படிக்கத் தெரியாது. எப்படியோ என் தந்தை தமிழில் கையொப்பமிடத் தெரிந்து கொண்டார். “கூ.நா. வரதப்ப முதலியார்” என்று, அவர் கையொப்பமிடச் சுமார் ஐந்து நிமிடங்களாவது ஆகும். அவர் பெயரில் அடங்கிய பதினான்கு எழுத்துக்களும், ஒன்றைப் பார்த்து ஒன்று கூத்தாடுவது போல் இருக்கும். சிரசாசனம் தவிர மற்ற ஆசனங்களில் பல அந்த எழுத்துகளில் காட்சி அளிக்கும். அவர் கையெழுத்திடும் போது நான் இருக்க நேர்ந்தால் எனக்குச் சிரிப்பு தாங்காது. என் தந்தைக்குக் தெரியாமல் சிரிப்பேன். சில சமயம் மறைவாக ஓடிப்போய்ச் சிரிப்பைச் சமாளித்துப் பின்னர்வருவேன். அவர் கோபங்கொள்ளமாட்டாராயினும், நான் அவரிடம் வைத்திருந்த மதிப்பு அவ்வாறு.
எந் தந்தை, ஏழை என்பதுதான் ஒரு குறை. சத்தியந்தவறாதவர். பொய் பேசவே மாட்டார். ஒருவரையும் மனம் நோகப் பேசமாட்டார். பண்பாடு ஒழுக்கம் இவற்றின் உச்சத்தில், அவர் ஆயுட்காலம் வரையில் வாழ்ந்தார். தனது 63-வது வயதில் அவர் முடிவு எய்தினார்.
அவரைப் போலவேதான், என் அன்னையும் ஊர்த் தொண்டாற்றி வந்தார். ஊருக்கெல்லாம் அவர் அன்னைதான். திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் எந்த நிகழ்ச்சி ஊரில் எவர் இல்லத்தில் நடந்தாலும், என் அன்னையின் தொண்டு அங்கெல்லாம் சிறந்து விளங்கும். குழந்தை மருத்துவம், பெண்கள் மருத்துவம் இவற்றில் கைதேர்ந்தவர் எனது அன்னை. அவர் ஆயுட்காலம் வரையில் எவரிடமும் மருத்துவத்திற்குக் காசு வாங்கியதில்லை. இருவருமே சலியா உழைப்பாளிகள். இத்தகைய தியாக சீலர்களுக்கு நான் மகனாகப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன். நினைந்து நினைந்து மகிழ்சிக் கண்ணீர் பெருக்குகிறேன்.
நான் படித்த பள்ளி, கிறிஸ்துவ மிஷினைச் சேர்ந்தது. இன்னும் கூடுவாஞ்சேரிக் குளத்தின் வடகிழக்கு மூலையில், அந்தக் கட்டிடம் இருக்கிறது. எனக்கு எழுத்தறிவு தந்த அந்தத் திருக்கோயில் இன்று கிறிஸ்துவர்கள் ஆலயமாகத் திகழ்கின்றது.
நான் பள்ளிக்கூடம் செல்லும் போது என்னைக் கூடவே அழைத்துப் போய் விடுவார் என் தந்தை. வரும்போது சில நாள் அங்கு வந்து அழைத்து வருவார். எனக்குப் படிப்பில் மிகவும் விருப்பமாகவே இருந்தது. அப்போது புளியங் கொட்டைகளைக் கொடுத்து அவற்றை அடுக்கி “அ, ஆ” போடச் சொல்வார்கள். மிகவும் பொறுமையோடும் யூகத்தோடும் கொட்டைகளை அடுக்கி எழுதுவேன். என்னிடம் ஆசிரியர்களுக்கு மிகவும் பிரியம். நான் பயபக்தியோடு நடந்து கொள்வேன். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் படிப்பு உயர்வு. இவ்வாறு எட்டு வயது முடிந்தது. நான் மூன்றாவது வகுப்புப் படித்து முடித்து விட்டேன். என் தந்தைக்குப் பிறர் உதவியின்றி நெசவுத் தொழிலைச் செய்ய முடியவில்லை. எனவே, என்னை வீட்டிலேயே நிறித்திக் கொண்டார். பள்ளிப் படிப்பு மூன்றாவது வகுப்போடு முடிவு பெற்றது.
ஏழாவது வயது முதலே நான் நெசவுத் தொழிலில் சில்லரை வேலைகளில் காலை மாலை ஈடுபட்டிருந்தேன். பாவு போடுவதில் என் தந்தைக்கு உதவியாக இருந்தேன். நூல் இழைப்பதில் என் அன்னைக்கு உதவினேன். பள்ளிக்கூடம் விட்டு நின்றபின் நெசவு நெய்யக் கற்கலானேன். என் உயரம் தறி நெசவிற்குப் போதவில்லை. லுங்கி நெசவிற்குக் குழித்தறிகள் தான் பொருத்தமானது. தறிக்குழியில் இறங்கினால் தலை மாத்திரம்தான் வெளியே தெரியும். எட்டி எட்டிக் கைக்கயிறு பிடித்து இழுத்து நாடாவை ஓட்டுவேன். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் மட்டும் நெசவில் எனக்கு அனுமதி. அதுவும் நான் பழகிக் கொள்ள மிகவும் விருப்பம் காட்டியதால். மேலும் இரண்டு ஆண்டுகள் சென்றது. நன்றாக நெசவு நெய்யக் கற்றுக் கொண்டேன். அந்த வயதில்தான், நான் என் பெற்றோரின் வறுமையை உணரும் நாள் ஒன்று வந்தது. அந்த நாள், அன்று நடந்த நிகழ்ச்சி, என்னைக் கண்கலங்கி உருக வைத்தது. என் உள்ளத்தில் ஆழப் பதிந்த அந்த நிகழ்ச்சிப் பதிவுதான், என்னைப் பிற்காலத்தில் ஒரு கடமை வீரனாக மாற்றியது என்றால், அது மிகையன்று. இரவு பகலாக எனது முயற்சியை ஓங்கச் செய்து பல துறைகளில் அறிவு பெறச் செய்த உருக்கமான நிகழ்ச்சி தான் அது. அதைப் பற்றி பிற்காலத்தில் நான் எழுதிய கவியிலும் குறிப்பு இருக்கிறது.


கவி


“ஐந்து வயதில் பள்ளி சென்றேன்; எட்டுஆண்டில் மூன்றாம் வகுப்பு முடித்து விட்டேன்;நொந்து வறுமை மீறிப் பருத்திப் பஞ்சுநூல் நெசவில் எனைப் பெற்றோர் பழக்கிவைத்தார்;இந்தத் தொழிலைச் செம்மையாகக் கற்றுஏதோ ஓர் அளவுக்குக் கூலி பெற்றேன்;வெந்து உள்ளம் உருகி ஏழ்மை தோன்றும்விதம், தெய்வம், உயிர் இவற்றைப் பற்றி ஆய்ந்தேன்;



எனக்கு காலையில் ஒரு தம்பிடி தோசை, சிறிது தயிர், ஒரு சிறு கட்டி வெல்லம் உணவாகக் கிடைக்கும். காலை சுமார் 9 மணிக்குக் கேழ்வரகு கூழ் கரைத்துக் கொடுப்பார்கள். அப்போது அது அமிர்தம் போல உடலுக்கும் உள்ளத்திற்கும் இனிமையாகவே இருந்தது. பகலில் சோறு சில நாட்களில் கிடைக்கும். சில நாட்களில் கூழ்தான் கிடைக்கும். மாலையில் நிச்சயமாக அரிசிச் சோறுதான்.
எனக்குப் பத்து வயதில் ஒரு நாள் பகல் 12-45 இருக்கும். நான் தறியில் நெசவு நெய்து கொண்டிருந்தேன். என் அன்னை வழக்கமாகப் பகல் 12-30-க்கு என்னைச் சாப்பிட அழைப்பார்கள். அன்று அதுவரையில் என்னைக் கூப்பிடவில்லை. நாங்கள் அப்போது ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்திருந்தோம். தறிகள் இரண்டு மேற்குப் புறம். நடுவே நாலடி உயரமுள்ள ஒரு சுவர். அதன் மறைவில் சமையல் சாப்பாடு எல்லாம்- சமையல் செய்யும் இடத்தில், என் அன்னையும் தந்தையும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என் அன்னை தனது முந்தானையை எடுத்துத் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்-நான் பார்த்து விட்டேன். என்னால் பொறுக்க முடியவில்லை. அந்த நாள் வரையில் என் அன்னை கண் கலங்கியதை யான் கண்டதே இல்லை. தறியை விட்டு எழுந்து துணியை எடுத்து உடுத்திக் கொண்டேன். நேராக என் அன்னையும் தந்தையும் இருந்த இடத்திற்கு வந்தேன். அம்மாவைப் பார்த்தேன். கண்களில் நீர் பெருக ஏனம்மா அழுகிறீர்கள். சொல்லம்மா! சொல்லம்மா! என்று, அவர்களைச் சேர்த்துக் காலைக் கட்டிக் கொண்டு வினவினேன். என் அன்னை என்னை இறுக அணைத்துக் கொண்டு “என் செல்வமே! நாங்கள் உன்னைத் தவமா தவமிருந்து பெற்றோமடா! இன்று உன் பசிக்கு ஒரு சோடுதலைக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கோவென்று கத்தி விட்டார்கள். நானும் வாய்விட்டு அழுதுவிட்டேன். என் தந்தையோ என் வலது கையைப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு அழுதுவிட்டார்.
அவர்கள் இருவரது வயிறும் ஒட்டிப் போயிருந்தது. உணவு கிட்டாமல் பட்டினி கிடந்திருந்தனர். சிறிது நேரம்தான் இவ்வாறு கழிந்தது. உடனே என்னை விடுவித்து என் தந்தையாரைப் பார்த்து “நீங்கள் சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ஒரு தகர சோடுதலையைக் கையில் எடுத்துக் கொண்டு போனார்கள். சில நிமிடங்களில் அந்த சோடுதலை நிரம்பக் கேழ்வரகு கூழோடு திரும்பி வந்தார்கள். “கண்ணா, இதைச் சாப்பிடுடா” இன்றைக்குச் சாயங்காலம் சீக்கிரமாகச் சோறாக்கி உனக்குச் சாப்பிடக் கொடுக்கிறேன்” என்றார். நான் அந்தக் கூழை உடனே குடிக்கவில்லை. நீங்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் செய்தேன். “நீங்கள் பசியோடிருக்கும் போது நான் மட்டும் எப்படியம்மா சாப்பிடுவேன்” என்றேன். எனக்கு ஆறுதல் கூறி ஒரு சிறு விழுங்கு வீதம் என் தந்தையும் அன்னையும் இருவரும் குடித்தார்கள். பின் நான் அந்தக் கூழை-என் வாழ்வில் நீங்கா நினைவாக இடம்பெற்ற அந்த ஒரு சிறிய தகர சோடுதலைக் கூழைக் குடித்தேன். பிறகு அம்மா அப்பா அருகில் உட்கார்ந்து கொண்டு, ஏன் நமக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்ற காரணத்தை வினவி, பல கேள்விகள் கேட்டேன். எனக்கு எவ்வாறு அவர்கள் வறுமையைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்? ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிச் சரிப்படுத்தினார்கள். ஆனாலும், அன்று வறுமை என்ற நிலையைப் பற்றிச் சிறிது புரிந்து கொண்டேன். இனி என் பெற்றோருக்கு வறுமை நீங்க, நான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்தேன். அதிக அளவு நெசவு நெய்தால், கூலி அதிகம் கிடைக்கும். அதைக் கொண்டு வறுமையைப் போக்கி விடலாம் என்று தெரிந்தது. அன்று முதல் இரவும் பகலாய் நெசவுத் தொழிலைச் செய்தேன். இரண்டு நாட்கள் ஒருவர் செய்யும் வேலையை ஒரே நாளில் திறமையோடு செய்து முடிக்கும் ஆற்றல் எனக்கு வந்து விட்டது. உழைத்தேன், ஓயாமல் உழைத்தேன்.



0 comments:

Post a Comment